search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக முதலீட்டாளர்கள் மாநாடு"

    சிலர் தன்னை பற்றி வாட்ஸ் அப்பில் சித்தரித்து அனுப்புவதை பற்றி கவலைப்படவில்லை என்றும், தமிழக மக்களை நம்பித்தான் தாம் அரசியல் நடத்திக்கொண்டிருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். #MKStalin #DMK
    சென்னை :

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் தி.மு.க. நிர்வாகிகள் இல்ல திருமணத்தை நடத்தி வைத்து, பேசியதாவது:-

    சுயமரியாதை திருமணத்தின் வரலாற்றை எல்லாம் நான் பல மேடைகளில் பேசியது உண்டு. அந்தத் திருமணங்கள் எவ்வாறு நடக்கும் என்பதையெல்லாம் நான் விரிவாக எடுத்துரைத்து இருக்கிறேன். வைதீக திருமணங்களை நடத்தி வைக்க புரோகிதர்களுக்கு எப்படி வரவேற்பு இருக்குமோ அதேபோல இதுபோன்ற சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைக்க எங்களைப் போன்றவர்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.

    வைதீக முறையில் நடைபெறக்கூடிய திருமணங்கள் எப்படி நடக்கும் என நான் விவரித்தால், மு.க.ஸ்டாலின் இப்படிப் பேசி விட்டாரே என சிலர் வாட்ஸ் அப்பில் ஜோடித்து அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள். அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. நாம் தமிழ்நாட்டு மக்களை நம்பித்தான் அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறோம். அப்படித்தான் இனியும் அரசியல் நடத்துவோம். அதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது.

    இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார்கள். அவர்கள் யார் படத்தை தன்னுடைய சட்டப்பையில் வைத்து ஊரை ஏமாற்றி வருகிறார்களோ அவர் கூட முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார். ஜெயலலிதா முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டை இரண்டு நாட்கள் நடத்திய பின்னர், 2.42 லட்சம் கோடி முதலீடு வந்திருக்கிறது என அறிக்கை வெளியிட்டார். இதனால் பல தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உருவாகப்போகிறது, தமிழ்நாட்டில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கப்போகிறது என்றெல்லாம் உறுதிமொழி கொடுத்தார். இதுவரைக்கும் அது நடந்ததா என்றால் இல்லை.

    ஜெயலலிதா மறைந்ததற்குப் பிறகு இவர்களும் ஒரு மாநாடு என்கிற நாடகத்தை நடத்தினார்கள். முதல் மாநாடு நடத்தி போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்னவென்றே தெரியாத நிலையில், இதுவரை எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டிருக்கிறது? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டிருக்கிறது? என்பது குறித்த புள்ளி விவரங்களுடன் ஒரு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டுமென நான் தொடர்ந்து சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வலியுறுத்தினேன். ஆனால் இதுவரையில் வைக்கவில்லை.



    ஜெயலலிதா எப்படி முதல் மாநாட்டை ஆடம்பரமாக செலவு செய்து நடத்தினாரோ, அதைவிட அதிக செலவு செய்து வீண் விளம்பரம் செய்து இரண்டாவது மாநாட்டை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. அந்த மாநாட்டுக்கு ரோடுகளில் சுற்றித் திரிந்தவர்களுக்கு கோட் சூட் அணிவித்து கட்டாயப்படுத்தி வரவழைத்து இருக்கிறார். வங்கிகளில் கடன் வாங்கி நோட்டீஸ் பெற்ற கம்பெனிகளின் முதலாளிகளும் அதில் அடக்கம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் என்னிடம் இருக்கிறது. சட்டமன்றத்தை கூட்டட்டும், ஆதாரத்தோடு அதனைச் சொல்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஜெயலலிதாவை விட நாங்கள் அதிக முதலீடு வாங்கி விட்டோம் எனச் சொல்லி, மூன்றரை லட்சம் கோடி முதலீடு வாங்கியிருக்கிறோம் என அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது எடப்பாடி அரசு.

    ஆனால், என்னைப் பார்த்து எடப்பாடி கேட்கிறார், இதுவரை மு.க.ஸ்டாலின் கிராமங்களுக்குச் சென்றது உண்டா? ஏன் புதிதாக கிராமத்திற்கு செல்கிறார் எனக்கேட்கிறார். நான் போகாத கிராமமே தமிழ்நாட்டில் இல்லை. இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் எல்லாம் அதிக கொடியேற்றிய ஒரு தலைவர் என்றால், அது நம்முடைய தலைவர் கருணாநிதி தான். அதற்கடுத்து யார் என்று கேட்டீர்கள் என்றால், நான் நெஞ்சு நிமிர்த்து சொல்வேன். அவருடைய மகனான நான் தான் இருக்கிறேன் என்று. என்னைப் பார்த்து எடப்பாடி சொல்கிறார் நான் கிராமத்துக்கு சென்று பஞ்சாயத்து செய்கிறேன் என்று, ஆனால், நீங்கள் கமி‌ஷனுக்கு போய் பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறீர்கள். இதுதான் உங்களுடைய நிலைமை.

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது. அந்த தேர்தலை யாராலும் தடுத்து நிறுத்திட முடியாது. நிச்சயம் வந்தே தீரும். அந்தத் தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத்தேர்தல் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆகவே, இந்த மதவாதம் பிடித்த பா.ஜ.க. அரசுக்கும், கமி‌ஷன், கலெக்‌ஷன், கரப்‌ஷன் அ.தி.மு.க அரசுக்கும் தக்க பாடம் புகட்டுகிற வகையில் வரக்கூடிய தேர்தலை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK
    இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு ‘மாயமான் காட்சி’ என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #GIM2019 #DMK #MKStalin
    சென்னை:

    2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.

    இருநாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சியில் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என தெரிவித்தார்.

    இந்நிலையில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு ‘மாயமான் காட்சி’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு ‘மாயமான் காட்சி’ என்பது மட்டுமே உண்மை. விளம்பரம் செய்து அரசின் பணத்தை வீணடித்தது தான் மாநாட்டின் முக்கிய சாதனை.

    முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு அமைச்சர்கள் உல்லாசப் பயணம் மேற்கொண்டனர்.

    அந்நிய முதலீடுகள் குறைந்து, முதல் 10 இடங்களுக்குள் தமிழகம் வர முடியவில்லை. நாட்டிற்குள் வந்த அந்நிய முதலீடுகளில் தமிழகம் பெற்றது 0.79% மட்டுமே.

    முதல் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 25 சதவீதத்தைக்கூட அரசால் நிறைவேற்ற முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். #GIM2019 #DMK #MKStalin
    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தொழில்திறன் மிக்க தொழிலாளர்கள் நிறைந்துள்ள மாநிலம் தமிழ்நாடு என புகழாரம் சூட்டியுள்ளார். #GIM2019 #VenkaiahNaidu
    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி  வெங்கையா நாயுடு பேசியதாவது:

    மத்திய, மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்புமே வளர்ச்சி தரும். தமிழும் தமிழ்நாடும் மனதுக்கு நெருக்கமானவை என எப்போதும் சொல்வேன். நாட்டில் மிக அழகான மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள் சிறந்த பலனளிக்கும் என உலகிற்கு உறுதி கூறுகிறேன். ரூ.3 லட்சம் கோடி முதலீடு உறுதியானது மகிழ்ச்சி.

    தொழில்திறன் மிக்க தொழிலாளர்கள் நிறைந்துள்ள மாநிலம் தமிழ்நாடு. அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது.



    தமிழகம் வாகனம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் முன்னணி வகிக்கிறது. மத்திய மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்புமே வளர்ச்சி தரும். 

    தமிழகத்தில் திறமையாக, கடினமாக உழைக்கும் தொழிலாளர்கள் ஏராளமாக உள்ளனர். ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரே குடும்பம் என்பது இந்தியாவின் தத்துவம் ஆகும்.

    மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்புபவர்கள், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. கருப்பு பணத்தை மீட்க வெளிநாடுகளுடன் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன என கூறினார். #GIM2019 #VenkaiahNaidu
    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #GIM2019 #EdappadiPalanisamy
    சென்னை:
     
    இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

    இதில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறை தொழில் கொள்கை 2019 என்ற விளக்க கையேட்டை வெளியிட்டு பேசினார். முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் என சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.



    இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிகள் இன்று மாலை 3 மணிக்கு நடைபெற்றன. இதில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    இரண்டு நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

    இந்த மாநாட்டின் மூலம் சுமார் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சுமார் 304 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

    கடந்த 2015-ம் ஆண்டை விட 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. அடுத்த உலக மூதலீட்டாளர் மாநாடு 2021ம் ஆண்டு நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார். #GIM2019 #EdappadiPalanisamy
    மூன்று நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி, இந்த சுற்றுப்பயணத்தின்போது உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைக்க உள்ளார். #Modi #VibrantGujarat #GlobalInvestorsSummit
    அகமதாபாத்:

    பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ளார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்காக  மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.



    டெல்லியில் இருந்து விமானப்படை சிறப்பு விமானத்தில் இன்று மதியம் அகமதாபாத்திற்கு வந்தார் மோடி. அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில், அவரை குஜராத் கவர்னர் ஓ.பி.கோலி, முதல்-மந்திரி விஜய் ரூபானி மற்றும் துணை முதல் மந்திரி எம். நிதின் படேல், குஜராத் பாஜக தலைவர் ஜீத்து வகானி, அகமதாபாத் மேயர் பிஜல்பான் படேல் மற்றும் முதன்மை செயலாளர் ஜெ.என் சிங் ஆகியோர் வரவேற்றனர்.

    இந்த வரவேற்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி காந்தி நகர் சென்று அங்கு நடைபெற உள்ள உலகளாவிய வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளார். அதன்பின்னர் அகமதாபாத் திரும்பும் மோடி, விஎஸ் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள, சர்தார் பட்டேல் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    அதன்பின்னர் நாளை (ஜனவரி 18) உலக முதலீட்டாளர் மாநாட்டை மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த மாநாட்டில் இரண்டு நாடுகளின் ஜனாதிபதிகள், நான்கு நாடுகளின் பிரதமர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்த பயணத் திட்டங்களை முடித்துக் கொண்டு 19-ம் தேதி அகமதாபாத் திரும்பும் மோடி, அங்கிருந்து சூரத் அருகே உள்ள ஹஜிரா சென்று துப்பாக்கித் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின்னர் அருகிலுள்ள  சில்வாஸா நகரத்திற்கு சென்று ஒரு மருத்துவக் கல்லூரியையும் திறக்க உள்ளார்.

    மோடியின் சுற்றுப்பயணத்தையொட்டி அகமதாபாத் மற்றும் காந்திநகர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    குஜராத் மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. அவ்வகையில் 9-வது உலக முதலீட்டாளர் மாநாடு நாளை தொடங்கி 20-ம் தேதி முடிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Modi #VibrantGujarat #GlobalInvestorsSummit 
    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள, சென்னை வர்த்தகமையத்தில் வருகிற ஜனவரி 23 மற்றும் 24 ஆகியநாட்களில், முதலீட்டாளர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற உள்ளது. #WorldInvestorsConference
    சென்னை:

    தமிழ்நாடு அரசின் தொழில்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள, சென்னை வர்த்தகமையத்தில் வருகிற ஜனவரி 23 மற்றும் 24 ஆகியநாட்களில், முதலீட்டாளர்கள் பங்கேற்கும் “தமிழ்நாடு இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019” மற்றும் முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான தொழில் பொருட்காட்சி நடக்க உள்ளன.

    மாநாட்டின் போது முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்கள் ஆகியவற்றைச் சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

    அங்கு அமைக்கப்பட உள்ள 250-க்கும் மேற்பட்ட பொருட்காட்சி அரங்குகளில் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் கூட்டாளர் நாடுகள் ஆகியோரின் தயாரிப்பு மற்றும் சேவைகள் பார்வைக்கு வைக்கப்படும்.

    மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் விவசாய வர்த்தகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்னணு சாதனங்கள் போன்ற தொடர்புடைய 12 முன்னணி துறைகளை முன்னிலைப்படுத்தி அமைக்கப்பட உள்ள பொருட்காட்சிக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன.

    பொருட்காட்சியில் பங்கேற்பதற்கு முன் பதிவுகள் செய்து கொள்வதற்கான கடைசி நாள் 15.11.2018 ஆகும். பொருட்காட்சி அரங்கத்திற்கான இடம் கட்டணமின்றி ஒதுக்கப்படும். இதற்கென உருவாக்கப்பட்ட ஒரு குழு பொருட்காட்சி அரங்கிற்கு விண்ணப்பித்தவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான இடத்தினைத் தேர்வு செய்து வழங்கும்.

    கூடுதலாக தேவைப்படும் அனைத்து விபரங்களுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: தலைவர், பொருட்காட்சிக்குழு, தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 மற்றும் மேலாண் இயக்குநர், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) தொலைபேசி :914428554514 நிகரி : 914428518999 மின்னஞ்சல்முகவரி : md@sipcot.com

    பொருட்காட்சியில் பங்கேற்பதற்காகப் பதிவு செய்ய www.tngim.com இணைய தளத்தை பார்வையிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும், முதலீட்டாளர்கள் இந்த அருமையான வணிக மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும்படியும் வேண்டப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #WorldInvestorsConference
    ×